எனது வாழ்க்கை விளக்கம் 

 

எனது முதல் ஆசான் (My First Guru)

பத்து வயது வரையில் எனக்கு வறுமை என்ற சொல்லுக்குச் சரியான பொருள் தெரியாது. உலகமே மகிழ்ச்சி பொங்கும் அரங்கமாக இருந்தது. முன் கட்டுரையில் எழுதப்பெற்ற ஒரு நிகழ்ச்சியினை நான் என் வாழ்வில் சந்தித்தபோது எனது மனதிலே ஒரு மாற்றம். இன்பத்தோடு துன்பம் கலந்து இருப்பதாக உலக வாழ்வை உணர்ந்தேன். வறுமையைப் போக்க ஊக்கத்தோடு உழைத்தேன். காலை 6 மணிக்குத் தறிக்குழியில் இறங்கினால், இரவு 9 மணி வரையில் தொடர்ந்து நெசவு நெய்வேன். மத்தியில் தறியில் இருந்தபடியே காலை உணவு கொள்வேன். கேழ்வரகுக் கூழ், அதை இரண்டு நிமிடங்களில் குடித்து விடுவேன். பகல் உணவு கொள்வதற்காகத் தறியை விட்டு எழுந்து வருவேன். இருபது நிமிடங்களில் சாப்பாடு ஓய்வு எல்லாம் முடிந்துவிடும். மீண்டும் நெசவு. என் அருமை அன்னையும், தந்தையும் என்னைக் கெஞ்சிச் சொல்வார்கள். "கண்ணா! அதிகமாக நெசவு நெய்யாதேடா, உடல் இளைத்துவிடும்; உன்னைப் பெற்ற அருமை, எங்களுக்குத் தானே தெரியும்" என்பார்கள். அவர்களுக்கு உருக்கமாகவும் பணிவாகவும் பதில் சொல்வேன். தறி நெய்வதில் எனக்கு மிகவும் ஆசை இருந்ததை எடுத்துக் காட்டி "அந்த ஆசை நம் குடும்பத்துக்கு நன்மைதானே அம்மா தருகிறது" என்பேன். நான் இத்தகைய பதில் சொல்லும்போது, என் அன்னை, பலதடவை ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். தறியில் இருந்தபடியே எப்போதும் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருப்பேன்.

எனது முதல் ஆசான்

         இந்த வயதில்தான் எனக்கு ஒரு குரு கிடைத்தார். எனது வயதுக்கு ஏற்ப அவர் பக்தி மார்க்கத்திலேயே எனது நினைவை ஆழ்த்தி வைத்தார். சில சமயம் சுத்த அத்வைத தத்துவம் பேசினாலும், எனக்கு அது புரியவில்லை. அவருக்கு அப்போது வயது எழுபத்தைந்து. அவர் பெயர் ஏ. பாலகிருஷ்ணன். அவருடைய நற்போதனைகள் என் சிந்தையைத் தூண்டிவிட்டன. அவர் சொற்படி ஒழுக்கத்தோடும், அடக்கத்தோடும் நடந்து வந்தேன். பஜனை செய்வதில் மிகவும் ஆர்வம் பெற்றேன். எனினும் அவர் விளக்கும் கருத்துக்களின் அடிப்படை உண்மை அறிய, எப்போதும் சிந்தித்துக் கொண்டேயிருப்பேன். எனக்குப் பன்னிரெண்டு வயதிற்குள் எனது உள்ளம் சில குறிப்பிடத்தக்க வினாக்களை எப்போதும் எழுப்பிக்கொண்டேயிருக்கத் தொடங்கியது. அவை

1. இன்ப துன்பம் எனும் உணர்ச்சிகள் யாவை?  இவற்றின் மூலமும் முடிவும் என்ன?

2. நான் யார்?  உயிர் என்பது என்ன?  உயிர் உடலில் எவ்வாறு இயங்குகின்றது?   நோயும் முதுமையும் ஏன் உண்டாகின்றன?  எப்படி உண்டாகின்றன?

3. கடவுள் யார்?  பிரபஞ்சத்தை ஏன் அவர் படைத்தார்?

4. ஏழ்மை ஏன்?  எப்படி உண்டாயிற்று?  அதைப் போக்குவது எப்படி?

         இவ்வினாக்கள் தான் என் சிந்தனையை ஆட்கொண்டன. அப்போது கிடைத்த குரு, எனக்குப் பஜனைப் பாடல்கள், சதகங்கள் இவற்றைத்தான் போதித்தார். ஆயினும் எனது வினாக்களில் ஒன்றுக்குக்கூட அவரால் விடை கூற முடியவில்லை. எனினும் எனக்கு இவ்வினாக்களை ஒட்டிய விளக்கங்கள் சில கிடைத்தன. அவை:

1. கடவுளை வழிபட்டு நமது குறைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் கடவுளே காட்சியாகி, நமக்கு அவர் நிலையை விளக்குவார்.

2. நல்ல வருவாயுள்ள தொழிலாகத் தேர்ந்து எடுத்து அதைச் செய்ய வேண்டும். அதன் மூலம் வறுமை போகும். தறி நெசவின் மூலம் வறுமை மிகுமே அன்றி, அது போகாது.

3. ஒரு ஞானகுருவை அடையவேண்டும். அவர் மூலம் உயிரைப் பற்றிய விளக்கம், அறிவைப் பற்றிய விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டும். இவையே என் உள்ளொளி காட்டிய விளக்கம்.

         இந்த முடிவின்படி செயல்புரியத் தொடங்கினேன். வயது பதினான்கு ஆகிவிட்டது.

நல்ல திருப்பம் (Great turning point)

முதலில் வறுமையிலிருந்து விடுபடவேண்டும். அதில் வெற்றி பெற நெசவுத் தொழிலை விட்டு, வேறு உத்யோகம் பார்க்க வேண்டும். அதற்கு ஆங்கிலம் படிக்க வேண்டும். இந்த முடிவில் கூடுவாஞ்சேரிப் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவரை அணுகி, எனக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும்படி வேண்டினேன். அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் மாதம் எட்டணா சம்பளம் கொடுக்க வேண்டும் எனக் கூறினார். அதுபோலப் பணம் கொடுத்துச் சிலர் "பிரைவேட்" படித்துக் கொண்டிருந்தார்கள். எட்டணா மாதா மாதம் யார் கொடுப்பார்கள்?  அதற்கு ஒரு வழி கண்டேன். தந்தைக்குச் செலவுப் பளு ஏற்படக் கூடாது எனவும் நினைத்தேன். எனக்கு அப்போது நாள் ஒன்றுக்குத் தோசை வாங்கிச் சாப்பிடக் காலனா கொடுப்பார்கள். அதை மீதப்படுத்தினால் முப்பது நாளைக்கு 71/2 அணா கிடைக்கும். தந்தையைக் கேட்டு அரையணா வாங்கிக் கொள்ளலாம். சேர்த்து எளிதாக ஆசிரியர் சம்பளம் கொடுத்து விடலாம். இவையே என் முடிவு. என் அன்னை தந்தையார் ஒப்புதலுக்கு முனைந்தேன். வேறு பிள்ளைகளோடு சேர்ந்து கெட்டு விடுவானோ மகன் என்ற நினைவில், அவ்வளவு எளிதில் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. பத்துத் தினங்களுக்குமேல் கழிந்துவிட்டன. என்னிடம் மூன்று அணா இருப்பு சேர்ந்துவிட்டது. காலையில் தோசையோடு தயிர் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.

           அந்த நாளில் இரண்டு தம்பிடி கொடுத்தால் ஒரு பெரிய தோசை கிடைக்கும். அது என் போன்றவர்களுக்குக் காலையில் சாப்பிடப் போதும், குழந்தைகளுக்கு ஒரு தம்பிடி தோசையே போதும். அத்துடன் கெட்டித் தயிர் ஒரு கொட்டாங்கச்சி நிறைய ஒரு தம்பிடிக்குக் கிடைக்கும். தோசையும் தயிரும் சேர்த்து உண்பது எனக்கு மிகவும் விருப்பமானது. ஆங்கிலம் கற்றுக்கொண்டு உத்தியோகம் பார்க்க வேண்டும் என்னும் விழைவில், காலையில் தயிரும் தோசையும் விலக்க வேண்டியவையாகிவிட்டன. காலை 7 மணிக்கெல்லாம் காலை உணவாகிய கேழ்வரகுக் கூழைச் சாப்பிட்டு விடுவேன். படிப்பிற்குச் சம்பளம் சேர்க்க அன்றே தொடங்கி விட்டேன். மூன்றணா சேர்ந்தபின் மீண்டும் எனது அன்னையைக் கெஞ்சினேன். அவர்களுக்கு நான் படிப்பது விருப்பம்தான். ஆயினும் ஒரு சிறு குழப்பம் அவர்களுக்கு _ கிறித்தவர்கள் இல்லம் சென்று இரவில் படித்தால், ஒரு வேளை அவர்களிடமிருந்து தண்ணீர் வாங்கிச் சாப்பிட்டு விடுவேனோ என்று சந்தேகப்பட்டார்கள். அந்த நாளில் அவ்வளவு வேறிபாடு கிறித்தவர்களுக்கும், இந்துக்களுக்குமிடையே இருந்தது. அப்படி ஏதும் தவறு செய்ய மாட்டேன் என்று உறிதி கூறினேன். பிறகு எனக்கு இரவில் படிக்க அனுமதி கிடைத்தது. அதனால் என் வேலையின் அளவு குறையாதபடி பார்க்க காலை நேரத்தில் சுமார் 5 மணக்கெல்லாம் தறியில் இறங்கி, விளக்கு வைத்து நெசவு நெய்யத் தொடங்கினேன். வேலையின் அளவைச் சரிக்கட்டிக் கொண்டேன்.

           என் தந்தையார் கையினாலேயே நாடா ஓட்டும் தறி நெய்தார். நான் கயிறு இழுத்து நாடா ஓட்டும் முறையைக் கற்றுக் கொண்டேன். அவர் நெசவின் அளவைப் போல் மூன்று மடங்கு நான் நெய்து விடுவேன். நான் அதிகமாக உழைப்பதைப் பற்றி எண்ணி எண்ணி வருந்துவார்கள் என் பெற்றோர். ஆயினும் ஒரு புறம் வறுமை. அவ்வறுமைக்கு என் உழைப்பே ஈடுகட்டி வந்தது. ஓரளவு நாங்கள் போதிய உணவுகொள்ள முடிந்தது. எப்போதும் பிறர் உதவியை எவ்விதத்திலும் நாடாமல் கண்ணியமாக வாழவேண்டும் என்ற கருத்து உடையவர்கள் என் பெற்றோர்; அவ்விதமே அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

பிள்ளையார் பூசை (Lord Ganesha worship)

வறுமையைப் போக்க வேண்டுமென்ற திட்டத்தின்படி ஆங்கிலம் படிக்கத் தொடங்கி விட்டேன். கடவுளைக் காண வேண்டுமே?  அதற்கு இறை வழி பாட்டில் ஆழ்ந்த நிலையை செலுத்தினேன். பிள்ளையார் வணக்கம் எளிதில் எல்லா வெற்றிகளையும் அளிக்கும் என்று கேள்விப்பட்டிருந்தேன். எங்கள் வீட்டில் பிள்ளையார் இல்லை. காரணம் அதை வைக்க தனி இடம் இல்லை. மேலும் ஒரு பிள்ளையார், மணையோடு வாங்க அக்காலத்தில் ரூபாய் இரண்டரை வேண்டியிருந்தது. அதற்கு ஒரு முடிவெடுத்தேன். கோயில் பிள்ளையாருக்கே பூசை செய்வது என்று முடிவு கட்டினேன். கூடுவாஞ்சேரி கிராமத்தில் பிள்ளையார் கோயில் சிறியது. அதன் சாவியைக் கேட்டு வாங்கிக் கொண்டேன். காலை 4.30 மணியிலிருந்து 5.00 மணிக்குள் பிள்ளையார் சிலைக்குத் தண்ணீர் ஊற்றித் தேய்த்து கழுவுவேன். அதற்கெனத் துணி இரண்டு துண்டுகள் இருந்தன. தினம் ஒன்றை அவிழ்த்துத் தோய்த்துக் காய வைப்பேன். காய்ந்த துண்டை உடுத்துவேன்.
 
        ஒருநாள் தண்ணீர் ஊற்றும்போது பிள்ளையார் சிலையைப் பார்த்தேன். அதில் செதில் செதிலாக அழுக்கு ஒட்டிக் கொண்டிருந்தது. அது பிள்ளையாருக்கு வலிக்கும்போல் தோன்றியது. கதவைச் சாத்திவிட்டு ஒரு கொட்டாங்கச்சி ஓடு கொண்டு பருக் பருக்கென்று சுரண்டிக் கொண்டிருந்தேன். இதை வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஒருவர், கதவைத் தட்டித் திறக்கச் செய்தார். "நீ என்ன செய்கிறாய்" எனக் கேட்டார். நான் உண்மையைச் சொன்னேன். அவர் என் மேல் சீறி விழுந்தார். "கொட்டாங்கச்சி எடுத்து பிள்ளையாரை சுரண்டுகிறாயே, அறிவு கெட்டவனே" என்று கத்தினார். எனக்கு அவர் கோபித்ததில் ஒன்றும் வருத்தமில்லை. பிள்ளையாருக்கு அபசாரம் செய்து விட்டானே என்று, எனது பிஞ்சு உள்ளம் மிகவும் வருந்தியது.
 
        மார்கழி மாதம் 4 மணிக்குப் பிள்ளையார் பூசை செய்தேன். குளத்து நீரில் நான் குளிக்கும்போது குளிர் என்னால் தாங்க முடியவில்லை. இதுபோலத்தான் பிள்ளையாருக்கும் குளிரும் என்று பரிதாபப் பட்டேன். அன்று வந்து என் தந்தையிடம் வினவினேன். "அப்பா!  பிள்ளையாருக்கு மார்கழி மாதத்தில் வெந்நீரில் முழுக்காட்டினால் என்ன?  என்றேன். புன்சிரிப்போடு என்னைப் பார்த்தார். "அப்படி செய்யக்கூடாதப்பா!  நீ நினைப்பது போலப் பிள்ளையாருக்குக் குளிராது" என்று எனக்குச் சமாதானம் கூறினார். சிந்தனையோடு பல வினாக்களை எழுப்பும் எனக்குக் கற்சிலைக்குக் குளிர் ஏது?  என்று தெரியவில்லை.

உணவு மாற்றம் (Change in food style)

கிராமங்களில் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் கோயில் உள்ள ஊர்களுக்குச் சென்று இரண்டு மூன்று தினங்கள் அங்கேயே உல்லாசமாகச் சமைத்து உண்டு, உற்சவம் பார்த்து விட்டுத் திரும்புவார்கள். என் பெற்றோரும் ஆண்டு தோறும் திருப்போருர், மகாபலிபுரம் ஆகிய இரண்டு ஊர்களுக்கும் போவார்கள். அதுபோல அவ்வாண்டும் என்னையும், என் தம்பியையும், அழைத்துக் கொண்டு, திருப்போரூர் சென்றார்கள். அங்கு இரண்டு நாட்கள் இருந்து, பிறகு மகாபலிபுரம் சென்றார்கள். எங்கள் குடும்பத்தில் மாமிச உணவு கொள்ளும் பழக்கம் இருந்தது. எனக்குச் சிறுவயது முதல் அவ்வளவு பிடிப்பதில்லை. ஆயினும் அடியோடு நிறுத்திவிடவில்லை. மகாபலிபுரத்தில் ஒரு திருவிழா, புத்தகக் கடை இருந்தது. அதில் ஒருசிறு புத்தகம் குறிப்பாக என் கண்ணில் பட்டது. அது "புலால் உணவின் கேடுகள்" என்ற தலைப்போடு இருந்தது. அதை ஒன்றே காலணா கொடுத்து வாங்கினேன். உடனே அதைப் படிக்கத் தொடங்கினேன். அதில் என் உள்ளத்தை நெகிழ வைக்கும் சில கவிகள் இருந்தன. அவற்றில் ஒன்று,

          அம்மா வெனவலற ஆருயிரைக் கொன்றருந்தி
          இம்மானிட ரெல்லாம் இன்புற் றிருக்கின்றார்
          அம்மாவெனும் ஓசை கேட்டகன்ற மாதவர்க்கும்
          பொய்ம்மா நரகமெனில் புசித்தவர்க்கென் சொல்லுவதே!

          என்ற கவி.

        மாபெருந் தவசியாயினும், ஒரு ஆடு அல்லது மாடு தன்னைப் பிறர் கொல்லும்போது வெளியிடும் "அம்மா"வெனும் ஓசையைக் கேட்டு விட்டால் அதை அக்கொடுந் துன்பத்திலிருந்து விடுவிக்காமல், அவ்விடத்தை விட்டு அகன்று போனால் அவருக்குப் பொய்ம்மா நரகம் கிட்டும். அவ்வாறாயின் அக்கொலைச் செயல் மூலம் கிடைத்த புலாலை உண்டவர்கள் எத்தகைய பாவத்துக்கு உள்ளாவார்கள்?  என்பதே இதன் கருத்து. இதைப் படித்தேன். எனது சிந்தனை விரைவாக ஓடியது. தெய்வ நினைவு எழுந்தது. நான் அதுவரையில் தெரியாமல் மாமிச உணவு உண்டு ஏற்றுக்கொண்ட பாவங்களை மன்னிக்கும்படி வேண்டினேன். கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். அன்று முதல் புலால் உண்ணா நோன்பை ஏற்றேன். என் அன்னையாரும், தந்தையாரும் எனது மனமாற்றத்திற்கு உளம் நிறைந்த ஆதரவு தந்தனர். பிறகு என் வாழ்நாளில் பரஞ்சோதி என்பவரோடு தொடர்பு கொண்ட காலத்தில் சில சமயம் உணவில் குழப்பங்கள் ஏற்பட்டன. எனினும் நான் மீண்டும் திருந்திக் கொண்டு உறுதியோடு புலால் தவிர்த்த உணவில் நிலைத்து விட்டேன்.

       பதினாறு வயது தொடங்கி நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் காண முனைந்தேன். பண்டிகை நாட்களில் படையல் போடுவது எதற்காக?  இந்தக் கேள்விக்கு என் பெற்றோரால் சரியானபடி விடையளிக்க முடியவில்லை. கடவுள்தான் நமக்கு வாழ்வளிக்கிறார். அதனால் அவருக்கு நாம் உணவு படைக்கிறோம் என்பார்கள். எனக்கு இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை. உடல் உள்ளவர்களுக்குத்தான் பசி உண்டு, உணவு தேவை. கடவுளுக்கு உடலில்லை. அவர் அரூபம். ஆகவே அவருக்கு உணவு தேவையில்லை. ஆயினும் கடவுளை நினைந்து நாம் உணவு கொள்ள வேண்டும். இதுவே படையலுக்கு அருத்தமாக இருக்கும் என்று எனது விளக்கத்தை என் பெற்றோருக்குச் சொன்னேன். அவர்கள் உள்ளப் பூரிப்பெய்தினர். நீ சொல்வதுதான் சரியப்பா என்று ஒத்துக் கொண்டார்கள். எனக்கு அது ஒரு பெரிய வெற்றியாகவே இருந்தது. ஊரில் சனிக்கிழமைகளில் பலர் கூடிப் பஜனை பாடிக் கொண்டு தெருக்களை சுற்றுவது வழக்கம். அடிக்கடி தாயுமானவர் பாடல்களில் ஒன்றான "அங்கிங்கெனாதபடி" எனத் தொடங்கும் பாடலை விருத்தமாகப் பாடுவார்கள். அந்தப் பாட்டில் எனது உள்ளம் முழுவதும் லயித்து விடும். அதன் மூலம் உணர்ந்த முடிவே, கடவுள் அரூபம் எனும் தெளிவு. இந்தப் பாடலே எனது உள்ளுணர்வைத் தூண்டி, தத்துவத்திலே தெளிவை அளித்து, இறைநிலையை யான் உணர உதவியது. தைமாதம் பொங்கல் தினம்! அன்று ஒரு அடை சுட்டுச் சூரியனுக்குப் படைத்தனர். அதில் உப்பில்லை. இது ஏன் என்று என் அன்னையைக் கேட்டேன். சூரிய பகவானுக்குச் செய்யும் இந்த அடையில் உப்புப் போடக்கூடாது. போட்டால் தவறு என்று கூறினார்கள். அவர்கள் கருத்துத் தவறு என்று எடுத்துக் காட்டினேன். நமது குடும்பத்தில் எப்போதோ ஒரு மாமியார் மறதியாக உப்புப் போடாமல் அடை சுட்டுவிட்டிருப்பாள். படையல் ஆனபின், அடையில் உப்பில்லையே என்று மருமகள் கேட்டிருப்பாள். சூரியனுக்குப் படைக்கும் அடையில் உப்புப் போடக்கூடாது என்று கூறி, தன் தவற்றை மாமியார் மறைத்திருப்பாள். பிற்காலத்தில் மருமகளும் அவ்வாறே உப்புப் போடாமல் அடை செய்திருக்கலாம். இவ்வாறுதான் தலைமுறை தலைமுறையாக இந்த வழக்கம் பின்பற்றப்பட்டிருக்கும் என்று கூறினேன். என் அன்னையும் தந்தையும் வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்த காட்சியை, நான் எவ்வாறு விளக்குவேன். அதன் பிறகு நடந்த பொங்கல் விழாக்களில் உப்பிட்டே அடை சுட்டுப் படைத்தனர்.

         எனது பதினெட்டு வயது வரையில், நான் இரவுப் பள்ளி சென்று ஆங்கிலம், தமிழ், கணக்கு இவற்றைக் கற்றுக் கொண்டேன். ஆசிரியர்கள் ஆண்டுதோறும் மாறினார்கள். மாதச் சம்பளம் ரூ.11/2 வரையில் உயர்ந்தது. அப்போது படிப்பு நான்காவது பாரத்திற்குச் (IV Form) சமம் என்று எனது ஆசிரியர் கூறினார். இந்த நிலைமையில்தான் நான் நெசவுத் தொழிலை விட்டு வேறு ஏதேனும் வேலை தேடிப் பெற வேண்டும் என விழைந்தேன். இந்த விருப்பத்தை என் அக்காளிடம் தெரிவித்தேன். கற்பகம் எனும் பெயருடைய மூத்த அக்காளும், அவர் கணவர் சித்த மருத்துவர் ஷண்முக முதலியாரும், மயிலாப்பூரில் இருந்தார்கள். அவர்கள் என்னை அங்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களுக்குத் தெரிந்தவர்களிடம் எனக்கு ஏதேனும் வேலை தேடித் தருமாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிகள் பற்றி நான் எழுதி உள்ள கவிகள் வருமாறு:
"எந்த ஒரு மனிதனுமிவ் வுலகமீது
   இன்ப துன்ப அனுபவத்தின் இயல்பென் னென்று
சிந்திக்கும் ஆற்றல் அவர்க்குயரும் போது
   சிவன் சீவன் இருநிலைகள் இருப்பியக்கம்
இந்த உலகில் மக்களிடையே காணும்
   ஏழ்மை நோய்மரண இயல்பு அறியவென்றே
உந்தப்படுவர்; எனக்கும் ஏழ்மை, தெய்வம்,
   உயிர்பற்றி அறிய அவா உண்டாயிற்று."

"இம்மூன்று கேள்விகளை எழுப்பிக்கொண்டு
   இரவு பகலாய்ச் சிந்தித்து அறிந்திடாமல்
நிம்மதியை இழந்தறிஞர் மன்றம் நோக்கி
   நீங்கள் சொல்லுங்கள் எனக் கேட்ட புத்தர்
செம்மையுள நேர்பதிலைப் பெறாததாலே
   சிறந்த அரசப் பதவி உதறித்தள்ளி
எம்முறையில் துன்புற்றார்?  எனக்கு மட்டும்
   எவ்விதத்தில் பதில் விளங்கும் எளிதில் அந்நாள்."

"ஓலைக்குடிசை வாழ்க்கை, உணவோ, சொற்பம்,
   உள்ளத்தில் முன்னேற வென்ற வேகம்,
ஆலை, வாணிபம் அரசியல் தொழில் செய்தற்கு
   ஆசையினால் ஆங்கிலம் படிக்கலானேன்;
வேலை செய்தேன் பகல் நேரம்; இரவில் சென்று
   விரும்பித்தமிழ் ஆங்கிலம் பயின்று வந்தேன்;
காலையிலே எனக்கென்று பெற்றோர் தந்த
   காலனா, ஆசான் சம்பள மாயிற்று."

"படிக்க எழுதத் தமிழோ டாங்கிலத் தைப்
   பதினெட்டு வயதிற்குள் கற்றுக் கொண்டேன்;
பிடிக்கவில்லை தொடர்ந்து செய்ய நெசவுவேலை;
   போய்விட்டேன் சென்னைக்கு வேலைதேடி
நொடித்தமனம் ஊக்கமுற எனக்கோர் வேலை
    நுங்கம்பாக்கத்தில் அஞ்சல் அகத்தில்கிட்ட,
வடித்த கண்ணீ ரதனைத் துடைத்து, என்றன்
    வாழ்வில் முன்னேறக் கடும் உழப்பை ஏற்றேன்."

எனது வாழ்க்கை விளக்கம்

ஒருவர் வாழ்க்கை வரலாற்றைப் பிறர் எழுதும்போது அவர் கையாளும் முறை வேறு. உள்ளத்திலெழும் பக்தியால், அன்பால் வரவாற்றுக்குரியவர் புகழ் ஓங்க வேண்டுமெனும் நோக்கத்தோடுதான், எழுதுவார். சில இடங்களில் அவர் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், படிப்பவர்களுக்குப் படிப்பினையாக அமையவும் கூடும். வரலாற்றுக்குரியவர் ஆற்றிய தவறுகளோ, இழிவான செயல்களோ, அவர் பிறருக்குப் புரிந்த கொடுமைகளோ, மற்றும் அவர் சிறுமை விளக்கும் நிகழ்ச்சிகளோ, எழுத்திற்கு வராது. அப்படி எடுத்துக் காட்டி எழுதுவதும் முறையன்று. ஆனால் ஒருவர் தானே தனது வரலாற்றை எழுதும்போது, எல்லா உண்மைகளையும் எழுதியே ஆகவேண்டும். பெருமைக்கோ சிறுமைக்கோ அங்கே இடமில்லை. இத்தகைய வரலாறுகளைப் படிக்கும் போது, அது படிப்போர் சிந்தனையை உயர்த்தும் இலக்கியமாகிவிடும். அறிவிற்கு வளம்தரும் வலிவூட்டும் மருந்தாக இருக்கும். வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் பல அமைந்த உலக இயல்பை வெளிப்படுத்தும் சிக்கல்களால் பின்னப்பட்ட சம்பவங்கள் நிறைந்திருக்கும். இத்தகைய  வரலாறுகளைப் படிப்பவர்களுக்கு வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளி தோன்றும். ஆட்சிச் சட்டம், மதச் சட்டம் இரண்டால் அமைக்கப் பெற்ற சமுதாயத்தில் கட்டுப்பட்டு வாழும் மனிதனுக்கு வாழ்வில் சிக்கல்கள் பல தோன்றுவது இயல்பு. சிந்தனையாளர்கள், அறிஞர்கள், மெய்ஞ்ஞானிகள் இவர்களால் எழுதப் பெற்ற சொந்த வாழ்க்கை வரலாறுகள், வாழ்வின் சிக்கல்களை அவிழ்க்க வழிகாட்டிகளாக இருக்கின்றன. எந்த ஒரு பேரறிஞரும் அவர் குழந்தையாக இருந்த காலமுண்டு. கற்பனையில் மயங்கி வாழ்ந்த காலமுண்டு. கற்பனைக்கும் தெளிவிற்கும் இடையே, பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே சிக்கித் தவித்த காலமுண்டு. அந்த அந்த அறிவு நிலைகளிலும் சிலர் சில கருத்துக்களை வெளியிட்டிருக்கலாம். அவர் அறிவிலே முழுமை பெற்றபின், அவரே வெளியிட்ட கருத்துக்கள் முன் வெளியிட்டக் கருத்துக்கு வேறுபட்டிருக்கலாம். இவையெல்லாம் வாழ்வின் இயல்பைக் காட்டுகின்றன. அவர் முன்னேற்றமடைந்த வழிகளைக் காட்டுகின்றன. எனது வரலாற்றிலும் வாழ்க்கைச் சிக்கல்கள் பல அமைந்துள்ளன. ஏற்றத்தாழ்வுகள், பெருமை, இழிவு, நன்மை, வன்மை எல்லாம் இருக்கும். என் வரலாற்றை நானே எழுதப் புகுந்ததால், அத்தனையும் இடம்பெறும். அன்பர்கள் மனம் தளராமல் சிந்தனையோடு படித்துப் பயன்பெற வேண்டும்.

         எனது வயது பதினெட்டு வரையில்தான் நான் எனது பெற்றோரோடு இருந்தேன். அதற்குள் அவர்களைக் கேள்விகள் மூலமும், விளக்கங்கள் மூலமும் திணறச் செய்துவிட்டேன். வினா எழுப்புவேன் ஏதோ பதில் சொல்வார்கள். எனக்கு நிறைவு தந்தால் ஒப்புக் கொள்வேன். இல்லையேல் அது தவறானது என்று காரணத்தோடு எடுத்துக் காட்டுவேன். என் விளக்கத்தைக் கேட்டு அன்னையும் தந்தையும் பூரித்துப் போவார்கள். அவர்கள் ஏழ்மை நினைவு, வாழ்க்கைத் துன்பங்கள் எல்லாம் என் பேச்சுக்களாலேயே மறந்து போவதாகக் கூறுவார்கள். எனக்கு உணவு ஊட்டுவதற்காகச் சொல்லி வந்த கஜேந்திர மோட்சக் கதையில் களிப்புக் கவர்ச்சி கொண்டிருந்தேன். எனக்கு ஏழு வயதில் அதே கதையில் ஒரு சந்தேகம் பிறந்தது. கூடுவாஞ்சேரியில், பத்தாவது நாள் மரணச் சடங்கு ஒருவருக்கு நடந்தது. அதை மோட்ச தீபம் என்று சொன்னார்கள். மோட்சம் என்றால் என்ன என்று, என் அன்னையை வினவினேன். இறந்து விடுகிறார்களே அதைத்தான் மோட்சம் என்று சொல்லுகிறோம் என்று பதில் அளித்தார்கள். என் சிந்தனை விரைவாக ஓடியது. "அம்மா கஜேந்திர மோட்சத்தில் வரும் யானையும் செத்துத்தான் போனது" என்றேன். அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. முக்தி என்றால் என்ன வென்றேன். முக்தி மோட்சம் எல்லாம் ஒன்றுதான் என்றார்கள். அப்போது முதலைக்கு முக்தி, யானைக்கு மோட்சம் என்று நீங்கள் சொன்னவை, இரண்டுமே சண்டையிலே செத்துப்போய்விட்டன என்றுதானே விளங்குகின்றது?  என்றேன். என் அன்னை கூர்ந்த அறிவு படைத்தவர். எனது மனநிலையைப் புரிந்து கொண்டார். "எனக்குப் பெரியவர்கள் சொன்ன கதையை அப்படியே உனக்குச் சொன்னேன் மற்றவை எனக்குத் தெரியாதப்பா" என்றார்கள். பிறகு எனது தந்தை வந்தார். நான் விடவில்லை. அப்பாவிடமும் இதே பேச்சு. அவரும் அன்னையைப் போன்றே பதில் அளித்தார். நானும் என் கருத்தையே எடுத்துச் சொன்னேன். என் தந்தைக்கு மகிழ்ச்சி பொங்கியது. அவரால் தாங்க முடியவில்லை. எனது அன்னையை நோக்கினார். "என்ன!  இவன் நமக்கு ஒரு முருகனாகவே பிறந்திருக்கிறான்!  பார்த்தாயா?  குழந்தை வயதிலேயே பிரணவத்திற்கு அப்பனையே விளக்கம் கேட்டுப் பின் அவனே தந்தைக்குப் பிரணவ இரகசியத்தை விவரித்துக் கூறினான் முருகன். தந்தையையே முருகன் வியப்பில் ஆழ்த்தினான். அதுபோல்தான் இருக்கிறது இவன் நமக்கு விளக்கம் கூறுவது என்றார். இருவர் உள்ளங்களும் பெற்ற மகிழ்ச்சியினை, யானே அறிவேன். அப்போதை விட, 62 ஆண்டுகட்குப் பின் கூட, இப்போதும் அக்காட்சியை நினைந்து இன்புறுகிறேன்.

          இந்த முறையில் பல கற்பனைக் கதைகளை ஏற்றுக் கொள்ள மறுத்தேன். என் மனோ நிலைமை தெரிந்த என் தந்தை ஒரு மாற்று வழி கண்டார். எனக்குச் சதகங்களைச் சொல்லிக் கொடுத்தார். படிக்கத் தெரியாத அவர், அறப்பளீசுர சதகம், தண்டலையார் சதகம், குமரேச சதகம் இவையெல்லாம் எப்படியோ மனப்பாடம் செய்து வைத்திருந்தார். முதலில் அவற்றைப் புத்தகமில்லாமலே சொல்லிக் கொடுத்தார். பிறகு எனக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தபின், அச்சதகங்களை வாங்கிக் கொடுத்துப் படிக்கத் தெரிந்தபின், அச்சதகங்களை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் செய்தார். கொண்டாடும் பண்டிகைகளுக்கு விளக்கம் கேட்பேன். அவர்களுக்குத் தெரிந்த வரையில் சொல்வார்கள். சில சமயம் எனக்கு மனநிறைவு ஏற்படாது. ஆயினும் அவர்கள் பக்தி முறையில் தெய்வ வழிபாடு நடத்தும்போது மன உருக்கத்தோடு அவரகள் உடனிருந்து தெய்வ வணக்கம் செய்து வந்தேன். சிந்தனை, தொழில், "பிரைவேட் படிப்பு" இவ்வாறு என் காலம் ஓடியது. பதினெட்டாவது வயது முடிவில் சென்னை சென்றுவிட்டேன். அங்கு எனது அக்காள் வீட்டில் தங்கி இருந்தேன்.

          என் மைத்துனர் எனக்காக வேலை தேடி அலைந்தார். சுமார் ஒரு மாத காலத்திற்குள் எனக்கு ஒரு வேலை கிடைத்தது. அக்காலத்தில் குதிரைப் பந்தயங்களுக்கு வெளியிலேயே அதற்கென அமைந்த கிளப்புகளில் பணம் கட்டும் முறை இருந்தது. அத்தகைய கிளப்புகள் இருந்தன. மவுண்ட் ரோட்டில் "ராயல் ரேஸிங் கிளப்" என்ற ஒரு நிறுவனத்தில் நான் அமர்ந்தேன். மாதச் சம்பளம் ரூபாய் ஐம்பது. வாரத்திற்கு இரண்டு ரேஸ்கள் நடக்கும். ஒன்று புதன் கிழமை, மற்றது சனிக்கிழமை. குதிரைப் பந்தய தினத்தின் முன் நாள், மாலை 3 மணிக்குப் போய் 7 மணி வரையில் வேலை செய்ய வேண்டும். பந்தய தினத்தில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரையில் வேலை. மறுநாள் காலை 8 மணி முதல் பகல் 1மணி வரையில் வேலை. வேலை செய்யும் தினங்களில் அரை நாட்களுக்கு ஒரு ரூபாயும், முழு நாட்களுக்கு ஒன்றரை ரூபாயும், சிற்றுண்டி அலவன்ஸ் என்று கொஞ்சம் காசும் கொடுத்தார்கள். அந்தக் காலத்தில் நான் படித்த படிப்பிற்கு மாதம் ரூ.75-க்கு குறையாமல் கிடைத்தது. அதிகம் எதிர்பாராத உயர்ந்த ஊதியம். எனது பெற்றோருக்கு ரூபாய் 10 செலவுக்குக் கொடுப்பேன். ரூபாய் 10 சீட்டுக் கட்டி வந்தேன். மிகுதியை அப்படியே எனது அக்காள் கணவரிடம் கொடுத்து விடுவேன்.

என் அறிவுக் கண்ணைத் திறந்த மகான்

      இந்தச் சந்தர்ப்பத்தில்தான் எனக்கு ஒரு மகான், இல்லற ஞானி, ஆசானாகக் கிடைத்தார். என் பெற்றோர் செய்த தவப் பயன் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் பெயர் வைத்திய பூபதி எஸ். கிருஷ்ணாராவ். அவர் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யூனானி மருத்துவம் மூன்றிலும் சிறந்த நிபுணர். தத்துவ ஞானத்தில் ஒரு மேதை. அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மகான். அவர் மந்தைவெளி பிராடீஸ் ரோடில், மருந்தகம் ஒன்று வைத்திருந்தார். அவர் முதலில் மயிலாப்பூர் நடுத் தெருவிலும், பிறகு ரொட்டிக்காரத் தெரு என்னும் தாச்சிமுத்து அருணாசலம் தெருவிலும் குடியிருந்தார். மாலை வேளைகளில் மாத்திரம் மந்தைவெளிக் கடைத்தெரு மருந்தகத்தில் இருப்பார். ஒருநாள் அவ்வழியே போய்க்கொண்டிருந்தேன். அவர் வேறு யாருடனோ தத்துவ ஞானத்தைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். நான் கடை ஓரத்தில் நின்று கொண்டு கூர்மையாக அவர் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து "நீ யாரப்பா, இங்கு ஏன் நிற்கிறாய்" என்றார். "ஐயா, நான் கூடுவாஞ்சேரியில் இருந்தவன். இங்கு வைத்தியர் ஷண்முக முதலியார் வீட்டுக்கு வந்திருக்கிறேன். அவர் எனது அக்காள் கணவர். எனக்கு ரேஸ் கிளப்பில் வேலை" என்றேன். "உள்ளே வா அப்பா, உட்கார்" என்று கனிவோடு கூறினார். அந்த மொழி, என் பெற்றோரை நினைவூட்டியது. உட்சென்று உட்கார்ந்தேன். அவர்கள் பேச்சை முடித்து விட்டு, என்னை நோக்கி, "நீ விரும்பினால், உனக்கு ஓய்விருக்கும் போதெல்லாம் இங்கு வந்து கொண்டிரு அப்பா" என்றார். அப்படியே செய்வதாகக் கூறி வீடு சென்றேன். பிறகு வாரத்தில் நான்கு நாட்களிலும் அவரைச் சந்திப்பேன். எனது ஓய்வு நேரம் எல்லாம் அவர் மருந்தகங்களிலும் வீட்டிலும் இருந்து வந்தேன். பல இரவுகளில் அவருடன் தங்கியிருந்தேன். அப்போது அவருக்கு வயது 65. எனக்கு ஆயுர்வேத மருத்துவத்தை முறையாகச் சொல்லிக் கொடுத்தார். சித்த மருத்துவம் இடையிடையே இடம்பெறும். தத்துவ விளக்கம் நன்றாகப் போதித்தார். சரக சம்ஹிதை, சுச்ருத சம்ஹிதை, மாதவநிதானம், அஷ்டாங்கஹிருதயம் மொழி பெயர்த்துப் போதித்தார். புருவத்திடையே தியானம் செய்யும் யோக முறையையும் போதித்தார்.

          இரண்டு ஆண்டுகளில் நான் மருத்துவத்தில் தேர்ந்த அறிவைப் பெற்றுவிட்டேன். தத்துவ அறிவிலும் தெளிவு பெற்றேன். தியானத்திலும் நல்ல பற்று உண்டாயிற்று. அவருக்கு என்னால் எந்த உதவியுமில்லை. ஆயினும் அவர் மகனைப் போல் என்னை ஏற்று, ஓர் சிறந்த மனிதனாக்கினார். அவரைப் போற்றுகிறேன். வணங்குகிறேன்.

இயற்கை நியதி

மேட்டினிலே கொட்டுநீர் பள்ளம் ஓடும்
   மேனோக்கி எறிந்த பொருள் நிலம்கவரும்
நாட்டிவைத்த கம்பினிலோ மரத்திலோ போய்
   நட்புடனே கொடி வகைகள் சுற்றிக்கொள்ளும்
சேட்டையாம் இளமையிலே ஆண்பெண் உள்ளம்
   சேர்ந்தொன்றி உடல் அணைய ஆர்வம் கொள்ளும்
கூட்டுறவால் எப்பொருளும் தன்மை மாறும்
   குணங்களெல்லாம் இயற்கையிலே அமைந்ததாகும்.


பெண்ணின் பெருமை

பெண் வயிற்றி லுருவாகிப் பின்னு மந்த
    பெண் கொடுத்த பால் உண்டே வளர்ந்து; மேலும்
பெண் துணையால் வாழுகின்ற பெருமை கண்டு
    பெண்மைக்கே பெருமதிப்பு தந்து உள்ளோம்
பெண்ணினத்தை எங்கெவரும் எவ்விதத்தும்
    பெருமைகுன்ற அவமதித்தால் சகிக்க மாட்டோம்
பெண்மைக்கு நமது கடன் ஆற்றவாரீர்
    பெருந்திரளாய் கூடி ஒரு முடிவு செய்வோம்.


வளமாக வாழ வழி வகுப்போம்

 வாழவேண்டும் என்றெண்ணி உலக மீது
     வந்ததில்லை எனினும் நாம் பிறந்துவிட்டோம
 வாழவேண்டும் உலகில் ஆயுள் மட்டும்
     வாழ்ந்தோர்கள் அனுபவத்தைத் தொடர்ந்து பற்றி
 வாழவென்ற உரிமை எல்லார்க்கும் உண்டு
     வாழ்வோர்க்கும் சாதகமாய் வாாழும் மட்டும்
 வாழ உள்ளோர் அனைவருமே ஒன்று கூடி
     வகுத்திடுவோம் ஒரு திட்டம் வளமாய் வாழ.

 

                                                                                Continue .....Click here